Friday, August 3, 2012

கணிதம்

இரண்டில் ஒன்று போனால்
ஒன்று
என்பது கணிதம்.

இரண்டில் ஒன்று போனால்
ஒன்றுமில்லை
என்பது காதல்.

Wednesday, May 23, 2012

காதல்

நீ மூடி மறைக்க
நினைத்த காதல்
முட்டிக்கொண்டு நிற்கின்றது
உன் மௌனத்தில்.
ஒருமுறை உன் இதழ்
அசைத்தால் போதும்,
உயிர் பெற்றுவிடும்
என் காதலும்
என் கவிதையும்.

Friday, April 13, 2012

அவளின் ஞாபகங்களே சுவாசம்


பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

நீயும் என்னைக்
காதலித்தாயா?

Tuesday, March 27, 2012

கண்ணீர்

நீ என்னை பிரிந்தாலும்
நீ என்னை மறந்தாலும்

என்றாவது நீ என்னை நினைக்கும் போது
கண்களில் இருப்பேன் கண்ணீராக!!

Friday, March 23, 2012

அழுகை

என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ
எனக்கு தெரியாது?

ஆனால் …
உனக்கு அழுகை வந்தாலே
என் உயிர் போய்விடும்!!

Saturday, March 10, 2012

வாழ்க்கை

நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது!

நாம் வாழ்ந்து முடிந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது!!

புரிதல்

என்ன சொல்லி என்ன!
என்ன எழுதி என்ன!

நான் சொல்ல வருவதைத் தவிர!
எல்லாம் புரிகிறது உனக்கு!!